Saturday 26 January 2019

'நிறக்குருடு'



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிற பாடலில் சொல்லியுள்ளபடி நாம் குறைகள் இல்லாமல் பிறந்திருந்தால் நன்றி செலுத்த வேண்டும்.
சிலருக்கு பிறவியிலேயே நிற வேறுபாட்டை அறிய முடியாமல் போகிறது. நிறக்குருடு என்கிறார்கள். புதுசாக இதுக்கு 'இன்னும் சரியாக' என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் நிறக்குருடு என்றே எழுதுகிறேன். blindness ஐ visually challenged என்று சொல்பவர்கள் மன்னிக்க.
இதிலும் பல வகைகள் உள்ளன. சிவப்பு பச்சைக்கு சரியாக வித்தியாசம் பார்க்க முடியாமல் இருப்பது ஒரு வகை. நீலம் மஞ்சள் வித்தியாசம் தெரியாமல் இருப்பது இன்னொரு வகை. இப்படி இன்னும் பல. முழுக்க முழுக்க நிறமே இல்லாமல் கருப்பு வெள்ளையின் சாயல்களாக பார்ப்பது அரிதே.
இன்றைக்குத்தான் இதற்கு ஒரு விசேஷ கண்ணாடி இருப்பது தெரிய வந்தது.
முதலில் இது நிறகுருடு பிரச்சினையை குணப்படுத்தாது. கிட்டப்பார்வை தூரப்பார்வை என்று நாம் கண்ணாடி அணியும்போது அவை சரியான பார்வைக்கு ஹேதுவாக இருக்கின்றனவே ஒழிய அதை சரி செய்வதில்லை, இல்லையா?
அது போலத்தான் இதுவும். அணிந்து கொண்டால் அணியாமல் இருப்பதைவிட நல்ல பார்வையை பெறலாம்.
எப்படி வேலை செய்கிறது? உதாரணத்துக்கு பச்சை சிவப்பு பிரச்சினை என்று வைத்துக்கொள்வோம். இந்த நிறங்களை தனித்தனியாக உணராமல் ஒன்றின்மேல் ஒன்று அமைந்ததாக உணர்கிறார்கள் என்பதே அடிப்படையில் பிரச்சினை. இந்த 'ஒவர் லேப்பிங்'கை இது வெட்டி விடுகிறது. 'கூலிங் க்ளாஸ்' போலவே சில நிறப்பிரிகையின் அலைவரிசைகளை வெட்டி விடுகிறது. இதனால் நிறங்களை தனித்தனியாக உணர்கிறார்கள். ஒரு குறை இல்லாதவர் உணர்வது போல இல்லாவிட்டாலும் முன்னே இருந்ததை விட பார்வை நன்றாகவே இருக்கும்.
குறைபாட்டை பொருத்து இது வேலை செய்யலாம் செய்யாமல் போகலாம். அதனால் வாங்கும் முன் பத்து நிமிஷத்துக்காவது போட்டு பார்த்து வித்தியாசம் இருந்தால் மட்டுமே வாங்கும் படி பரிந்துரை செய்கிறார்கள்.
வலையில் தேஎடினால் ரூ 8,000 அளவில் இந்தியாவிலேயே கிடைப்பதாக தெரிகிறது.
கூடுதல் தகவல்களுக்கு இந்த விடியோவை பாருங்கள்.

கடைசியாக ஒரு புதிர். பிறவிக்குருடருக்கு எல்லாம் கருப்பாக தெரிகிறதா? விடையை பின்னூட்டத்தில் கொடுங்கள்.



Wednesday 23 January 2019

கான்சருக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட ஆய்வு.



கான்சருக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்ட ஆய்வு.

உலகில் பல விதமான கான்சர்கள் இருக்கின்றன. ரேடியேஷனில் மாயமாக போகிறவை உண்டு. அறுவை சிகிச்சையில் குணமாகிறவை உண்டு. மருந்து கொடுத்து குணமாகிறவை கூட உண்டு.
இவற்றுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு விட்டேனா பார் என்று சவால் விடும் கான்சர்களும் உண்டு.
இவை எல்லாவற்றிலும் பக்க விளைவுகள் உண்டு. சில சமயம் நோயை விட இந்த பக்க விளைவுகள் கொடுமையானவை என்று தோன்றும். அந்த அளவுக்கு.
கான்சருக்கும் மருந்துகளுக்கும் இருக்கிற உறவு திருடன் போலீஸ் விளையாட்டு போல தொடர் கதையானது.
இன்னொரு வித்தியாசமான வழியையும் கூட சோதித்து இருக்கிறார்கள். ஏன் உடலின் எதிர்ப்பு சக்தி இவற்றை கண்டு பிடித்து அழிப்பதில்லை? உடம்பு இதை சரியாக கண்டுபிடிக்காததே காரணம். அதை கண்டு பிடிக்க வைத்தால்?
இதை இம்யூன் செக் பாய்ண்ட் ப்ளாகேட் என்கிறார்கள். சில பல கான்சர்களுக்கு இவை நல்ல தீர்வாக தோன்றினாலும் சீக்கிரத்தில் இந்த முறையும் செயலற்று போகிறது. சினிமாவில் நடிகர் கன்னத்தில் மறு வைத்துக்கொண்டு எதிரிகளை தான் வேறு ஆசாமி என்று நம்ப வைப்பதைப் போல இந்த கான்சர் செல்கள் தன் ஆன்டிஜன்களை உரு மாற்றிக்கொண்டு ஆன்டி பாடிகளை ஏமாற்றிவிடுகின்றன!
சமீபத்திய ஆராய்ச்சி இதற்கும் ஒரு தீர்வை கண்டு பிடித்திருக்கிறது. வேஷம் போட்டுக்கொள்ள உதவும் RNA- வை திருத்தும் என்சைமான ADAR1 ஐ செயலிழக்க வைத்தால் கட்டிகள் மீண்டும் இம்யூன் சிகிச்சைக்கு கரைகின்றன என்று கண்டுபிடித்துள்ளார்கள். டெக்னிகலாக இருந்தாலும் பரவாயில்லை படிக்க வேண்டுமென்பவர்களுக்கு
சில வகை நுரையீரல் கான்சர்களுக்கு தோல் கான்சர்களுக்கும் இப்போதைக்கு இது பயன்படுவதாக தெரிகிறது.

Tuesday 22 January 2019

ரயில் பெட்டிகள்








இரண்டு நாட்களுக்கு முன்னே இந்தியாவில் இருந்து ஆஸ்த்ரேலியாவுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகள் அனுப்பப்போகிறார்கள் என்று செய்தியை சமூக ஊடகங்களில் பார்த்தேன். முதன்முறையாக என்றெல்லாம் எழுதப்பட்டு இருந்தது.
இல்லையே முன்னேயே நடந்திருக்கிறது போலிருக்கிறதே என்று வலையை தோண்டினால் ஆமாம், முன்னேயே நைஜீரியா தான்ஃஜானியா போன்ற சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பங்களாதேஷ், ஶ்ரீலங்கா, மியான்மார், தைவான், தாய்லாந்த் ஆகிய ஆசிய நாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் ஏற்றுமதி செய்து இருக்கிறோம்.
பின்னே இப்போது இது ஏன் அடிபடுகிறது?
வளர்ந்த நாடான ஆஸ்திரேலியா இந்த ஆர்டரை கொடுத்து இருக்கிறது.
ப்ரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டம் நிறுவனத்துடன் இந்தியா 'மேக் இன் இண்டியா' திட்டத்தில் ஒப்பந்தம் செய்ததன் பேரில் ஆந்திராவின் சிரி சிடி இல் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. அங்கே சென்னை கொச்சி லக்னோ நகரங்களில் மெட்ரோ சேவைக்கு பெட்டிகள் தயாராகின. 2014 இல் ஆஸ்திரேலிய மெட்ரோவுக்கு ஆர்டர் பெற்று சரியான நேரத்தில் பெட்டிகளை முடித்துக்கொடுத்து இருக்கிறது. அடுத்து கனடாவுக்கும் மும்பையின் மூன்றாம் தடத்துக்கும் குறி வைத்து இருக்கிறது.
இது ஒரிஜினல் இந்திய கம்பனி தயாரிப்பு இல்லைதான். இருந்தாலும் இந்த மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் பல தொழிற்நுட்பங்கள் இந்தியாவுக்கு வரவும் அனுபவம் கிடைக்கவும் வாய்ப்பு பெருகி வருகிறது.


Monday 21 January 2019

விவசாயமும் உயர் தொழிற்நுட்பமும்.



தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி சொல்லுவது வீ வில் யூஸ் 'டெக்னலாஜி' ஃபார் ப்ராக்ரஸ். மிகவும் பிரச்சினையில் இருக்கும் விவசாயத்துறை இன்னும் அதை அதிகமாக பயன்படுத்தவில்லை. இந்நிலையில் உயர் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் விவசாயிகள் பற்றிய செய்தி நல்ல செய்தியாக இருக்கிறது

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த, ராஜகுமாரன் என்ற விவசாயி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன், செயற்கைக்கோள் உதவியுடன், பயிர்களுக்கு தன்னிச்சையாக நீர் பாய்ச்சும் முறையை உருவாக்கியுள்ளார்.

இதை தினமலர் விவரமாக வெளியிட்டு இங்கே இருக்கிறது. படித்துப்பாருங்கள்.

Wednesday 16 January 2019

சதுரங்கமும் சென்னையும்



சென்னைக்கும் சதுரங்கத்துக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கிறது. சென்னையிலிருந்து பல சதுரங்க வீரர்கள் வெளிப்பட்டு இருக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது மானுவல் ஆரான் என்று கேள்விப்படுவோம். அவர் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டர். இது வரை தமிழ் நாட்டில்
கிராண்ட் மாஸ்டர்  -16
கிராண்ட் மாஸ்டர் (பெண்கள்) -3
இண்டர்நேஷனல் மாஸ்டர் - 30
இண்டர்நேஷனல் மாஸ்டர் (பெண்கள்)  - 12
தோன்றியிருக்கிறார்கள். http://tamilchess.com/tn-gms-ims/

இந்த வரிசையில் இப்போது லேடஸ்ட் குகேஷ். உலக அளவிலேயே இளைய வயதில்  இரண்டாவது கிராண்ட் மாஸ்டர். கடந்த 16 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற போட்டியில் ஜெயித்து இவர் அந்த தகுதியை பெறும்போது வயது 12 வருஷங்கள் 7 மாதங்கள் 17 நாட்கள். இது வரை தமிழ்நாட்டின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் ப்ரஞ்ஞானந்தா.
உலகிலேயே இளைய கிராண்ட் மாஸ்டர் செர்ஜி சர்ஜகின் (12 வருஷம் 7மாதம்) 2002 இல் ஏற்படுத்தியசாதனை இன்னும் முறியடிக்கப்படாமலே இருக்கிறது.
மேலும் படிக்க

Saturday 12 January 2019

நல்ல செய்திகள்


நல்ல செய்திகள் ஆங்கில இணைய தளம்.
https://www.goodnewsnetwork.org/
இப்படி ஒரு இணைய தளம் இருக்கிறது. இன்னும் விவரமாக பார்க்கவில்லை; ஆனால் இந்த கான்சப்டே போதாதா?
சூடிக்கொடுத்தவர் ஆண்டாள்.
சுட்டி கொடுத்தவர் நண்பர் க்ருஷ்ணமூர்த்தி.எஸ். 
நன்றி!

Friday 11 January 2019

நெகிழி கழிவு



தார் ரோடு போடும்போது கூடவே நெகிழி கழிவுகளை சேர்த்து போட்டால் ரோடு அதிக வருஷங்கள் உழைக்கிறது என்று பல வருஷங்களுக்கு முன்பே மதுரை தியாக ராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஶ்ரீ வாசுதேவன் கண்டுபிடித்தார். இந்த முறை சென்னை ஐஐடியிலும் நடைமுறைபடுத்தி காட்டப்பட்டு இருக்கிறது.

நமக்கு தோன்றலாம், அட இது அருமையாக இருக்கிறதே? ஒரு பக்கம் நெகிழி கழிவுகளை அகற்றலாம், இன்னொரு பக்கம் தார் ரோடுகள் நீண்ட நாள் உழைக்கும். இது வின் வின் சிச்சுவேஷன்!
உணமையில் அப்படித்தான் போட வேண்டும் என்று விதி முறை கூட இருக்கிறதாக கேள்விப்பட்டேன். ஆனால் நிச்சயமாக நடைமுறையில் இல்லை. ஏன்?

ரோடுகள் அடிக்கடி பழுதாவதிலும் அடிக்கடி டெண்டர் விட்டு காண்ட்ராக்ட் கொடுப்பதிலும் யாருக்கு ஆர்வம் இருக்கிறது? அதனால்தான் இது நடக்கவில்லை என்று தோன்றுகிறது.

ஒரு வழியாக அரசு நெகிழி கழிவை பிரச்சினை என்று ஒத்துக்கொண்டு 14(?) வகை நெகிழி தயாரிப்புகளை தடை செய்திருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழியை என்ன செய்வது என்பது பிரச்சினையாக உருவெடுக்கும் போலிருக்கிறது.
பிரதமர் திட்டத்தில் கழிவறைகளை கட்ட இவற்றை பயன்படுத்தி உருவாக்கிய ப்ளாஸ்டோன் என்னும் கற்களை பயன்படுத்தலாம் என்கிறார் அதே பேராசிரியர்.

மேலும் விவரங்களுக்கு

https://tamil.thehindu.com/tamilnadu/article25966934.ece

Thursday 10 January 2019

ஆல்ஃபா கதிர் சிகிச்சை




பல்கலை பாலிடிக்ஸும் அரசு இயந்திர மெத்தனமும் 70% நோயாளிகளில் கான்சர் செலகளை அழிக்கும் ஒரு இஸ்ரேல் தொழிற்நுட்பத்தை ஏறத்தாழ கிடைக்காமல் செய்துவிட்டது.
டெல் அவைவ் பலகலை பேராசிரியர்கள் யோனா கெய்சாரி, இட்ஷக் கெல்சன் ஆகியோர் ஆல்ஃபா கதிர்களால் கான்சர் செல்களை அழிக்க விழைந்தனர். இந்த கதிர் கான்சர் செல் டிஎன்ஏவின் இரு இழைகளையும் உடைத்துவிடும். ஆனால் சுற்றியுள்ள நல்ல செல்களை அழிக்காது. பிரச்சினை ஆல்ஃபா கதிர்கள் 50 மைக்ரான் (1/20 மிமீ) அளவே ஊடுருவும்.

பீட்டா, காம்மா கதிர்கள் அதிகம் ஊடுருவுமானாலும் அவை ஒரு டிஎன்ஏ இழையை மட்டுமே உடைக்கும். சமயத்தில் செல் மீண்டும் உயிர்த்துவிடும். இக்கதிர்கள் பக்க விளைவுகளை அதிகமாக உருவாக்குவதுடன் நல்ல செல்களையும் பதம் பார்த்துவிடும்.

ஒரு 5 செ.மீ அளவு உள்ள கட்டிக்கு நூறாயிர கணக்கான கதிர்கள் தேவைப்படும். ரேடியம் 224 என்னும் ஐஸோடோப்பை கொடுக்கையில் அது கட்டிக்குள் ஊடுருவி விடுவிக்கும் அணுக்கள் 3 மிமீ வரை ஊடுருவும் கதிர்களை விடுவிக்கின்றன. மேலும் இது இம்யூன் சிஸ்டத்தை தூண்டிவிட்டு கான்சர் செல்களை அடையாளம் கண்டு அழிக்க தூண்டும்.

மேலும் ஆராய்ச்சி தேவைப்பட்ட நிலையில் இதன் காப்புரிமை பதிவு செய்யப்பட்டதில் தகராறு ஏற்பட்டு சிக்கலாகிவிட்டது. இந்த சிக்கலை விடுவிக்க யூஃஜி ஸோபர் என்பவர் 2015 இல் நியமிக்கப்பட்டார். இவர் புதிய நிறுவனம் ஒன்றை துவக்கி சிக்கலை தீர்த்ததுடன் மேலும் ஆராய்ச்சிக்கு நிதி உதவியும் தேடிக்கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க https://is.gd/5WeZzF

Tuesday 8 January 2019

வெற்றிக்கதை

சினிமாத்தனமா அப்பப்ப சில வெற்றிக்கதைகள் செய்திகளில வரும். ஒரே ஒரு பாட்டில சாதா ஆள் பால் வியாபார கிங் ஆ ஆகறது சினிமால மட்டும்தான் நடக்கும். நிஜ வாழ்கையில் இவரப்போல உழைச்சு மேல வரவங்கதான்.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் கிராமத்தில் உள்ள விவசாய கூலி தொழிலாளியின் மகனான பாபுராவால் படிப்பதற்கு புத்தகம் வாங்க இயலாத நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைதேடி ஹைதராபாத் வந்தார்.

அவருக்கு இந்த டீ கடையை கூட்டிப்பெருக்கும் வேலைதான் கிடைத்தது சரி என்று அந்த வேலையை ஆனந்தமாக செய்தார் இரவில் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் துாங்கிக்கொள்வார்.

சில வருடங்களில் டீ மாஸ்டராக பதவி உயர்வு பெற்றார் ஒரு நெருக்கடி காரணமாக இந்த கடையை நடத்த முடியாத முதலாளி கடையை பாபுராவிடம் விற்றுவிட்டார்.பாபுராவ் கடைக்கு பொறுப்பு ஏற்றபிறகு வெறும் டீ மட்டும் கொடுக்காமல் வாடிக்கையாளர்களுக்கு பிஸ்கட்டும் தயாரித்துக் கொடுத்தார்....
முழுக்க படிக்க:  

https://www.dinamalar.com/news_detail.asp?id=2182557

Sunday 6 January 2019

நெகிழி மாற்று



நெகிழி நாளுக்கு நாள் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு அதை பயன்படுத்தும் 10 பொருட்களை தடை செய்து விட்டது. மாற்று குறித்து நாம் குழம்பி வரும் வேளையில் ஒரு நல்ல மாற்று வரும் போலிருக்கிறது. முன்னேயே இதம் சாத்தியங்களை கேட்டு இருக்கிறேன். இப்போது இந்தோனேஷியாவில் ஒருவர் உண்மையாகவே கடல் பாசியிலிருந்து மாற்றுப்பொருளை தயாரிக்கிறார்.
விடியோவை பாருங்கள்.

https://twitter.com/BBC/status/1049326804555759616

https://twitter.com/BBC/status/1049326804555759616

பீனோ ஃஜெபின்

25 வயது பீனோ ஃஜெபீன். சென்னையை சேர்ந்த இவர் 100% பார்வையை இழந்தவர்.
2015 இல் இவர் ஐஎஃப்எஸ் துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் முற்றிலும் பார்வை இழந்த பெண்மணி ஆனார். இதற்காக அரசு விதி முறைகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. அவற்றை முறையே செய்து இவருக்கு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது.

ப்ரெய்ல் புத்தகங்களைத்தான் பெரும்பாலும் பார்வை இழந்தவர்கள் நம்பி இருப்பார்கள். அதாவது ஒரு புத்தகம் அந்த முறையில் வெளியிடப்பட்டாலே ஒழிய இவர்களால் அதை படிக்க முடியாது. பிறர் படித்து காட்ட வேன்டி இருக்கும். இவர் கணினி திரையில் தெரிவதை படித்துக்காட்டும் மென்பொருள் ஒன்றை பயன்படுத்த்னார். அதனால் பலவற்றையும் படிக்க முடிந்தது.
உசாத்துணை : https://thelogicalindian.com/?p=6366

செய்தி தகவல் ஶ்ரீ வாசு பாலாஜி.

Wednesday 2 January 2019

மல்டிபில் மயலோமா


'கான்சர்'
சில பல வருடங்களுக்கு முன் சினிமாக்களில் கதாநாயகன்/ நாயகிக்கு வரும் மோசமான 'அபிமான' நோய் 'ப்ளட் கான்சர்'.
இவற்றிலேயே இரண்டாவதாக பெரும்பாலானோரை பாதிக்கும் நோய்  'மல்டிபில் மயலோமா', எலும்பு மஜ்ஜையில் ரத்தத்தின் எதிர்ப்பு சக்தி என்று நாம் சொல்லும் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் 'ப்ளாஸ்மா' செல்களின் கட்டுப்பாடில்லாத வளர்ச்சி இதை உண்டு பண்ணுகிறது.
ஒவ்வொரு நோயாளியும் தனித்தன்மை வாய்ந்து இருப்பதால்  இதை ஆரம்ப காலகட்டத்தில் சோதனை மூலம் கண்டு பிடித்தல் கடினம். அத்துடன் இவருக்கு சிகிச்சை ஆரம்பிக்கலாமா வேண்டாமா என்று நிர்ணயிப்பதும் கடினம்.
செயற்கை நுண்ணறிவு இதற்கு இப்போது கை கொடுக்கிறது.
இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இயந்திரத்தை கற்க வைப்பதன் மூலம் இந்த செல்களை வகைப்படுத்துதலை எளிதாக்கி இருக்கிறார்கள். தனிப்பட்ட மனிதர்கள் இடையே இந்த செல்கள் வெவ்வேறு மாதிரி இருந்தாலும் ஒரே நபரின் ரத்தத்தில் ஒரே மாதிரிதான் இருக்கும். மயலோமா இருந்தால் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஆகவே இந்த இயந்திரம் ஆராய்ந்து செல்களின் உருவத்தை கற்று அவை வெவ்வேறு மாதிரியாக இருக்கிறதா இல்லையா என்று சொல்லிவிடும். பல்லாயிரம் செல்களில் சில இப்படி இருந்தாலும் கூட கண்டு பிடித்துவிடும்.


https://is.gd/Ozlq3B

ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்

முன்னே போல இப்போதெல்லாம் உட்கார்ந்து எழுத முடியவில்லை . சிரமமாக இருக்கிறது . அதனால் போஸ்ட் அதிகம் போடவில்லை ....